தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு – கிழக்கில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை நிறுவனங்க ளும் அதிகமாக உள்ளன.
வடக்கு – கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு – கிழக்கில் திறக்கப்பட்டுள்ளன. இது அரசின் திட்டமிட்ட செயற்பாடா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க கொண்டு வந்த நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,நுண் நிதி நிறுவனங்களின் மிலேச்சனதனமான செயற்பாடுகள் மோசமாக உள்ளன. வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தற்போது தெற்கிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடும் நிலையில் வீட்டு தேவைக்காகவும் வாழ்வாதாரங்களுக்காக மக்கள் கடன் பெறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி பகல் கொள்ளையில் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
யாழ்ப்பாணத்தில் 6 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 136 வங்கி கிளைகள் உள்ளன. வடக்கு கிழக்கு மாகாண எல்லையில் உள்ள மாவட்டமொன்றில் 1 இலட்சம் மக்களுக்கு 23 கிளைகள் உள்ளன. பொதுவாக வங்கி அடர்த்தியின் படி 17 வங்கி கிளைகளே இருக்க வேண்டும். அதுதான் இலங்கையின் நிதி ஏற்பாடாகும்.
ஆனால் தொழிற்சாலை இல்லாத, பொருளாதார சீரற்றுள்ள வடக்கு – கிழக்கில் வங்கிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு கிழக்கில் திறக்கப்பட்டுள்ளது. இது அரசின் திட்டமிட்ட செயற்பாடாகும்.
2009ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்கில் 26 வங்கி கிளைகளும் கிழக்கில் 52 கிளைகளுமே இருந்தன. ஆனால் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. எந்த நோக்கத்துக்காக இது உருவாக்கபபட்டுள்ளது. வடக்கின் தற்கொலைகள் அதிகரிப்பின் பின்னால் நிதி நிறுவனங்களில் தாக்கம் உள்ளது.
கடன் தீர்வுக்கு அரசு விடுவிப்பு வழங்க வேண்டும். இல்லாவிடின் கால அவகாசம் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் போரின் தாக்கத்தை விடவும் கடன் பிரச்சினையாலும் நுன்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டினாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண அரசு தலையீடு செய்ய வேண்டும்.
தமிழர்களின் பணமும் சொத்துகளும் அரசின் வைப்புகளில் உள்ளன. தமிழர்கள் நுண்நிதி நிறுவன தாக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் அரசு திட்டமிட்டு இந்தக் காரியங்கள் செய்கின்றதா?. பொது மக்களின் கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் – என்றார்.